

சென்னை,
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை தான் சந்தித்ததிலேயே 'மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை கொண்டவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட் மூளை என்பது போட்டியின் அனைத்து சூழல்களையும் ஆழமாக புரிந்துகொள்ளும் ஒருவரைக் குறிக்கும். ஒவ்வொரு சூழலுக்கும் அவர்களிடம் ஒரு தீர்வு இருக்கும். அதற்கு பின்னால் அனுபவங்கள் இருக்கும். இதுபோன்ற சூழல் இதற்கு முன் ஏற்பட்டது, அப்போது இப்படித்தான் நடந்தது. அதனால் இப்போதும் இதேபோல் நடக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் அவர்கள் சிந்திப்பார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், " அப்படி ஒரு நபர்தான் ஆஷிஷ் நெஹ்ரா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் இரண்டு ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். கிரிக்கெட் அறிவு என்று வரும்போது, அவர் பேசுவது அனைத்தும் தெளிவான புரிதலுடன் இருக்கும். உண்மையிலேயே நான் சந்தித்தவர்களில் மிக சிறந்த கிரிக்கெட் மூளை கொண்டவர் ஆஷிஷ் நெஹ்ராதான்" என்று மொயீன் அலி பாராட்டினார்.