ஒருநாள் கிரிக்கெட்: கேப்டன் பதவியிலிருந்து ரோகித்தை நீக்க பி.சி.சி.ஐ. முடிவு..?


ஒருநாள் கிரிக்கெட்: கேப்டன் பதவியிலிருந்து ரோகித்தை நீக்க பி.சி.சி.ஐ. முடிவு..?
x

image courtesy:PTI

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோகித் கூறியிருந்தார்.

மும்பை,

விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.

எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது 38 வயதான ரோகித் சர்மா 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு அந்த ஒருநாள் உலகக்கோப்பை வரும்போது வயது 40-ஐ எட்டிவிடும். இதனால் அவர் அதுவரை விளையாடுவாரா? என்ற கேள்வி நிலவுகிறது. இருப்பினும் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று ரோகித் சர்மா கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவர் வீரராக தொடருவாரா? இல்லையா? என்பதை குறித்து எதுவும் முடிவெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இது இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோகித் தலைமையில் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் விளையாடிய இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. அதுவும் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில்தான் அந்த தோல்வி வந்தது. மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

1 More update

Next Story