

கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் முக்கிய ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பர்ஹானும், பகார் ஜமானும் அதிரடி காட்டினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்தது. பகார் ஜமான் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பர்கான் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. மதுஷன்கா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
பாகிஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.