

லண்டன்,
உலக கோப்பை கிரிக்கெட்டில் வாழ்வா-சாவா கட்டத்தில் உள்ள போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணியை பர்மிங்காமில் எதிர்கொள்கிறது. இதையொட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா-இங்கிலாந்து மோதும் ஆட்டத்தில் உங்களது ஆதரவு யாருக்கு? என்பதை பதிவிடுங்கள் என்று பாகிஸ்தான் ரசிகர்களை கேட்டிருந்தார்.
பாகிஸ்தான் ரசிகர்கள் இங்கிலாந்தை நோக்கி கையை நீட்டுவார்கள் என்று எதிர்பார்த்த நாசர் ஹூசைனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணிக்காகவே தங்களது குரல் ஒலிக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இந்தியா எங்களது அண்டை நாடு, கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர்களுக்கே ஆதரவு. இந்திய அணி வெற்றி பெற கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர்.
இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் தான், பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.