

கவுகாத்தி,
ஐபிஎல் தொடரில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் கடந்து அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக, ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, 26 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில், சூர்யவன்ஷிக்கு பெங்களூரு அணியின் அனுபவ பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். போட்டியில் தோற்றது குறித்தும், சூர்யவன்ஷி குறித்தும் அவர் கூறி இருப்பதாவது;
”சூர்யவன்ஷி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். 15 வயதான வைபவ் அவர், வயதை விட மிகவும் பக்குவமாக இருக்கிறார். அவர் பந்தை கண்மூடித்தனமாக அடிக்கவில்லை, சரியான ஷாட்களை ஆடுகிறார். நேர்த்தியாக பேட்டிங் செய்யும் விதத்திற்கு முழுப் பாராட்டும் அவருக்கே சேரும்.
எங்களிடம் திட்டங்கள் இருந்தன. நாங்கள் ஒரு கேட்சையும் தவறவிட்டோம், ஆனால் கிரிக்கெட்டில் அது நடப்பதுதான். அதனால் நாங்கள் செய்ய நினைத்ததை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. மேலும் தோல்வி, போட்டியின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். அதனால் நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை,.”
இவ்வாறு அவர் கூறினார்.