புச்சிபாபு கிரிக்கெட் அரையிறுதி : தமிழக லெவன் அணி 265 ரன் சேர்ப்பு

தமிழக லெவன் அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்துள்ளது
சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று தொடங்கியது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக லெவன் அணி ஆட்ட நேரம் முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் 112 ரன்னும், கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் பால் 91 ரன்னும் எடுத்தனர். ஆந்த்ரே சித்தார்த் (20 ரன்), பாபா இந்திரஜித் (12 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர்.
அரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 225 ரன்னில் அடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அரியானா 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.






