மிட்சேல் மார்ஷ் அரைசதம் : பஞ்சாப்புக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி

பஞ்சாப் அணி தரப்பில் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
Image Courtesy : Twitter @IPL
Image Courtesy : Twitter @IPL
Published on

நவி மும்பை,

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர், லிவிங்ஸ்டன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ராகுல் சாஹர்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சர்பிரஸ் கான் உடன் மிட்சேல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். 5 பவுண்டரி , 1 சிக்சருடன் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சர்பிரஸ் கான் ஆட்டமிழந்தார்.

பின்னர் டெல்லி அணியின் பேட்டிங் சரிவை நோக்கி சென்றது. அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்களிலும் , பவல் 2 ரன்களிலும் லிவிங்ஸ்டன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மிச்சேல் மார்ஷ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com