

மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. புனேவில் இன்று நடைப்பெற்று வரும் 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கினர். நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் இந்த முறை 6 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன் பிறகு தீபக் ஹூடா - டி காக் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் டி காக் 46 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ஹூடா 36 ரன்களில் ரன் அவுட்டாக அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர். இதனால் லக்னோ அணி சரிவை நோக்கி சென்றது . இறுதியில் ஹோல்டர் - சமீரா ஜோடி சிக்சர்களை விரட்டி அதிரடி காட்டினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.