

கவுகாத்தி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியது. கவுகாத்தியில் இன்று நடைபெற்ற எப் பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி ஜார்கண்ட் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் விஜய் ஷங்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கௌஷிக் மற்றும் சூர்யபிரகாஷ் சோபிக்காத நிலையில் அடுத்து களமிறங்கிய பாபா அபராஜித் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பாபா இந்திரஜித் நிலைத்து நின்று விளையாடினர். 132 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இந்திரஜித் ஆட்டமிழந்தார். அதே போல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சாய் கிஷோர் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 7 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்துள்ளது. நாராயண் ஜெகதீஷன் 10 ரன்களுடனும் முகமது 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.ஜார்கண்ட் அணி தரப்பில் ராகுல் சுக்லா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.