ரஞ்சி டிராபி: 93 ரன்களில் சுருண்ட தமிழ்நாடு அணி


ரஞ்சி டிராபி:  93 ரன்களில் சுருண்ட தமிழ்நாடு அணி
x

ஜார்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது

கோவை,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 173 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி வரிசையாக விக்கெட்டுகளை தாரை வார்த்தது. சச்சின் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஜெகதீசன் 3 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 9 ரன்னிலும், பாபா இந்திரஜித் ரன் எதுவுமின்றியும், ஆந்த்ரே சித்தார்த் 2 ரன்னிலும் நடையை கட்டினர். ஜார்கண்ட் அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 18 ரன் எடுத்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது . இன்றைய ஆட்டத்திலும் தமிழ்நாடு அணி திணறியது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டது.

ஜார்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

1 More update

Next Story