

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே திடீரென பதவி விலகினார். கேப்டன் வீராட் கோலியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் பதவி விலகினார். பயிற்சியாளர் பதவியில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை கும்ப்ளே தெரிவித்து இருந்தார்.விராட்கோலிக்கும், தனக்கும் சுமூகமான உறவு இல்லை என்றும், நான் பயிற்சியாளராக நீடிப்பதை அவர் விரும்பவில்லை என்றும் இருவரும் இணைந்து செயல்படுவது ஏற்கத்தக்கதாக இல்லை என்பதால் ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
கும்ப்ளே பதவி விலகிய தால் இலங்கை தொடருக்கு முன்பு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பங்களை தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து கோரியிருந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை பிசிசிஐ அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது. அதில், டாம் மோடி, ரிச்சர்டு பைபஸ், லால்சந்த் ராஜ்புத், சேவாக் ஆகியோர்கள் பெயர் இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு ரவிசாஸ்திரி விண்ணப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் இயக்குநராக 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ரவிசாஸ்திரி பதவி வகித்ததால், ரவிசாஸ்திரியே பயிற்சியாளராக தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.