தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பண்ட்... இதுதான் காரணம் - ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் நடப்பு தொடரில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Image Courtesy: @IPL / @LucknowIPL
Image Courtesy: @IPL / @LucknowIPL
Published on

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் லக்னோ அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

ஆனால், லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். லக்னோ அணிக்காக 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் நடப்பு தொடரில் எப்படி அசத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் 27 கோடிக்காக வாங்கப்பட்டதால் கட்டாயம் அசத்த வேண்டும் என்ற அழுத்தமே ரிஷப் பண்ட் திறமை இருந்தும் தடுமாறக் காரணம் என்றும், கேப்டன்ஷிப் பொறுப்பு அவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாகவும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிஷப் பண்ட் விளையாடுவதைப் பார்க்கும் போது அவர் எப்போதுமே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக நீங்கள் உணர்வீர்கள். ஆனால், இம்முறை அவர் அப்படி இருப்பது போல் தெரியவில்லை. அவர் சிரித்து, மகிழ்ந்து, ரிலாக்ஸாக, மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை அது கேப்டன்ஷிப் பொறுப்பால் இருக்கலாம்.

புதிய அணிக்கு உச்சபட்ச சம்பளத் தொகையுடன் வந்துள்ளதும் காரணமாக இருக்கலாம். அவர் தன்னுடைய உண்மையான குண நலனை வெளிப்படுத்துவதாகவும் தெரியவில்லை. அவருடைய ஆட்டம் மற்றும் ஷாட் செலக்சன் ஆகியவற்றில் மகிழ்ச்சியான சமநிலை இருக்க வேண்டும். அதையும் தாண்டி அவரிடம் ஸ்பார்க் இருப்பதைப் பார்க்க முடியவில்லை.

இயற்கையாகவே அவர் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களைப் பொழுது போக்கக்கூடியவர். இயற்கையாகவே துடிப்பான பாடி லாங்குவேஜ் கொண்டவர். இருப்பினும் கடந்த 10-11 போட்டிகளாகவே அவரை பார்த்து வருகிறேன். அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com