வார்னரின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

மும்பை அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விளையாடினார்.
மும்பை,
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது..
இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மும்பை - சிக்கிம் அணிகள் மோதின. இதில் மும்பை அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விளையாடினார்.
முதலில் களமிறங்கிய சிக்கிம் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார், பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 94 பந்துகளில் 155 ரன்கள் எடுத்தார்.இறுதியில் 30.3 ஓவர்களில் மும்பை 2 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் ரோகித் சர்மா 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 9-வது முறையாகும். இதனால் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் குவித்த வீரரான ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.
ரோகித் சர்மாவின் ஆட்டத்தை சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.






