

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி அரையிறுதியில் தோற்றபின், அணிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரோகித்தின் ஆலோசனையை விராட் கோலி ஏற்கவில்லை என்றும் இதனால்தான் பிரச்சினை என்றும் தெரிகிறது. ஆனால், உலகக் கோப்பை தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்குவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது. இதை மீறி மூத்த வீரர் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்தே அணிக்குள் பிரச்சினை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் தனித்தனியாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. விராட்-ரோகித் விரிசல் இப்போது அதிகரித்து இருப்பதாகவும் இருவருக்குமான பனிப்போர் முற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அவரை பின் தொடர்வதில் இருந்து ரோகித் வெளியேறி இருக்கிறார். விராட் கோலியின் பக்கத்தை பின் தொடர்வதில் இருந்து முன்பே விலகி விட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து இவர்கள் பிரச்சினை முற்றியுள்ளதாகத் தெரிகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி இடையிலான பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும்போது, இது உங்களால் உருவாக்கப்படும் கதை என்றார்.
விராட், அனுஷ்காவைப் பின் தொடர்வதில் இருந்து ரோகித் விலகினாலும், விராட் கோலி, ரோகித்தை பின்தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் பிரச்சினைக்கு வலுசேர்ப்பது போல அமைந்திருக்கிறது, சமீபத்தில் அனுஷ்கா சர்மாவின் வலத்தளப் பதிவு. புத்திசாலி மனிதன் இந்த நேரத்தில் அமைதியாகத்தான் இருப்பான். தவறான தகவல்கள் வெளிவரும்போது உண்மையால் மட்டுமே மவுனத்துடன் கைகுலுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.