

லக்னோ,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (4 நாட்கள்) விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.
மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடந்து தொடக்க வீரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கேம்பல் கெல்லவே களம் புகுந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கான்ஸ்டாஸ் (109 ரன்) சதமும், கேம்பல் கெல்லவே (88 ரன்) அரைசதமும் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து களம் கண்ட நாதன் மெக்ஸ்வீனி 1 ரன், ஆலிவர் பீக் 2 ரன், கூப்பர் கோனோலி 70 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 73 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய ஏ தரப்பில் லியாம் ஸ்காட் 47 ரன்னுடனும், ஜோஷ் பிலிப் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ தரப்பில் ஹார்ஷ் துபே 3 விக்கெட்டும், கலீல் அகமது, குர்னூர் பிரார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.