

சென்னை,
மகளிர் பிரீமியர் லீக்-ல் சதமடித்த முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் மும்பை வீராங்கனை ஸ்கைவர்-பிரண்ட் ஆர்சிபி-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 57 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மகளிர் பிரீமியர் லீக் 2026 சீசனில் 16 வது போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், ஆர்சிபி அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இதில், சஜனா 07 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மேத்யூஸ் உடன் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
இங்கிலாந்து வீராங்கனையான இவர், 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், முன்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவரும் இவர்தான்.