பாலியல் வழக்கு: நேபாள கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

பாலியல் வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வந்த சந்தீப் லமிச்சேன் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்
image courtesy: AFP 
image courtesy: AFP 
Published on

காத்மாண்டு ,

நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார்.

சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ந்தேதி காத்மாண்டு ஓட்டல் ஒன்றில் சந்தீப் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக சந்தீப் லமிச்சேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் நேபாள கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சேனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கோர்ட்டு விதித்த சிறை தண்டனையை எதிர்த்து சந்தீப் லமிச்சேன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை பதான் ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

இந்த விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட 8 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com