

அகமதாபாத்,
ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா 2 ரன்னிலும், ப்ரப்சிம்ரன் சிங் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கனோலி (0), ஐயர் (19), நேஹல் வதேரா (0) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி 47 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில், ஸ்டோய்னிஸ் மற்றும் ஷெட்சே இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷெட்சே அரைசதமடித்து 57 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 40 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் தரப்பில் ஹோல்டர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.