ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி: டெல்லி அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கு

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி: டெல்லி அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

ஜெய்ப்பூர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 66-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய பஞ்சாப் அணியின் சார்பில் பிரியான்ஸ் ஆரியா மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஆர்யா 6 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட ஜோஸ் இங்லீஸ் 32 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த பரப்சிம்ரன் சிங் 28 (18) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய வதேரா 16 (16) ரன்களும், ஷஷான்சிங் 11 (10) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த ஸ்டோய்னிஸ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 53 (34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஓமர் சாய், வந்த வேகத்திலே வெளியேற, அவரைத்தொடர்து மார்கோ ஜான்சன் (0) ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

முடிவில் ஸ்டொய்னிஸ் 44 (16) ரன்களும், பிரார் 7 (2) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக முஷிபுர் ரகுமான் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் மற்றும் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com