ரிஷப் பண்ட்டின் உதவியால் உயர்கல்விக்கு செல்லும் மாணவி - குவியும் பாராட்டு

மாணவி ஜோதிகாவும், கல்லூரி நிர்வாகமும் ரிஷப் பண்டிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
பெங்களூரு ,
கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உதவிக்கரம் நீட்டியுள்ளார். கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் ஜோதிகா என்ற மாணவி உயர்கல்வியில் கணினி பயன்பாடுகளில் இளங்கலைப் பட்டம் (BCA) படிப்பில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அவர் உயர்கல்விக்கு செல்ல முடியமால் தவித்துள்ளார் .
இந்த செய்தி ரிஷப் பண்ட்டின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவி ஜோதிகா உயர் கல்வியில் சேர ரூ.40 ஆயிரம் பணத்தை ரிஷப் பண்ட் அனுப்பியுள்ளார் . தொடர்ந்து மாணவி ஜோதிகாவும், கல்லூரி நிர்வாகமும் ரிஷப் பண்டிற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.இது தொடர்பாக மாணவி ஜோதிகா எழுதியுள்ள கடிதத்தில் ,
நான் உயர்கல்வியில் BCA படிப்பைத் தொடர உதவி செய்த ரிஷப் பண்டிற்கு மிகவும் நன்றி கூறுகிறேன், மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். நான் ஒரு மென்பொருள் பொறியாளராக விரும்புகிறேன், இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவேன்.என தெரிவித்துள்ளார் .
ரிஷப் பண்ட்டின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .






