கேப்டன் பதவி பற்றி சுப்மன் கில்லுக்கு எதுவும் தெரியாது - அமித் மிஸ்ரா

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்டார்.
Image Courtesy: AFP / File Image 
Image Courtesy: AFP / File Image 
Published on

புதுடெல்லி,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் ஆடியது. இதில் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அடுத்த 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. ஐ.பி.எல் தொடரில் சரியாக கேப்டன்ஷிப் செய்யாத சுப்மன் கில் இந்திய அணிக்கு கேப்டன்ஷிப் செய்ய தகுதியானவரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் தாமாக இருந்தால் சுப்மன் கில்லை ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமித்திருக்க மாட்டேன் என்று இந்தியாவின் அமித் மிஸ்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, அவரை (சுப்மன் கில்) நான் கேப்டனாக தேர்வு செய்திருக்க மாட்டேன். கடந்த ஐ.பி.எல் தொடரை பாருங்கள். குஜராத் அணியில் எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.

இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது. கடந்த சில ஐ.பி.எல் தொடர்களில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கும் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கேப்டனாக அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்திய அணி நிர்வாகம் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கலாம்.

ஆனால் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட போது அவரிடம் தலைமை பண்புகள் வெளிப்படவில்லை. ஐ.பி.எல் தொடரில் எப்படி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. கேப்டன்ஷிப் பற்றிய ஐடியா கூட அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியில் இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை கேப்டனாக நியமிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com