டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: பவுண்டரி லைனை தள்ளியது... - சூர்யகுமார் பிடித்த கேட்ச் குறித்து ராயுடு


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: பவுண்டரி லைனை தள்ளியது... - சூர்யகுமார் பிடித்த கேட்ச் குறித்து ராயுடு
x

2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது.

கேப்டவுன்,

கடந்த வருடம் (2024) அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இதில் இந்தியா நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 151 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. அப்போது அந்த அணிக்கு 24 பந்தில் 26 ரன் மட்டுமே தேவையாக இருந்தது.

ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் (5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்) விக்கெட்டை பாண்ட்யா கழற்றியது, 18-வது ஓவரில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து 2 ரன் மட்டுமே வழங்கி மிரட்டியது, இறுதி ஓவரின் முதல் பந்தில் டேவிட் மில்லர் (21 ரன்) தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே மிக லாகவமாக சூர்யகுமார் பிடித்தது இப்படி திக்...திக்...திக் திருப்பங்களுடன் ஆட்டமும் இந்தியா பக்கம் சாய்ந்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் அடங்கி கோப்பையை கோட்டை விட்டது. சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த கேட்ச் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் சூர்யகுமார் பிடித்தது கேட்ச் அல்ல உலகக்கோப்பை என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் சில ரசிகர்கள் அது கேட்ச் கிடையாது என்றும்,அது சிக்சர் என்றும் சமூக வலைதளங்களில் குறை கூறி வந்தனர். எல்லைக்கோடு கொஞ்சம் நகர்த்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பவுண்டரி லைனில் அச்சு மைதானத்தில் இருந்ததாகவும் கூறினர். இதில் சூர்யகுமார் யாதவ் கால் வைத்ததால் நியாயமாக இது சிக்சர் என்று அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் அப்போட்டியின் இடைவேளையில் வர்ணையாளர்கள் அமர்ந்து பேசுவதற்காக ஒளிபரப்பு குழுவினர் பவுண்டரி எல்லையை பின்னோக்கி தள்ளியதாக இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். கடைசியில் அது இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “உலகளாவிய ஒளிபரப்பு வர்ணனையாளர்கள் இருந்தனர். இடைவேளையின் போது, வழக்கமாக நடப்பது என்னவென்றால், ஒளிபரப்பாளர்கள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க உதவும் வகையில் அவர்கள் அங்கு ஒரு நாற்காலியையும் ஒரு திரையையும் வைப்பார்கள். அதனால்தான் அவர்கள் பவுண்டரி லைனை சிறிது பின்னோக்கித் தள்ளினார்கள். ஆனால், திரையையும் நாற்காலியையும் அகற்றிய பிறகும், அவர்கள் பவுண்டரி லைனை அப்படியே விட்டுவிட்டார்கள். அப்படித்தான் எல்லை கொஞ்சம் பெரியதாக மாறியது. நாங்கள் (வர்ணனையாளர்கள்) அதை மேலிருந்து பார்க்க முடிந்தது. அது கடவுளின் திட்டம்” என்று கூறினார்.

1 More update

Next Story