டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன..?

டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
image courtesy:AFP
image courtesy:AFP
Published on

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் அமெரிக்கா தோற்கடித்தது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 44, ஷதாப் கான் 40 ரன்களும் அடித்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனங்க் படேல் 50, ஆன்ட்ரிஸ் கவுஸ் 35, ஆரோன் ஜோன்ஸ் 36, ரன்களும் அடித்தனர். அமெரிக்காவும் சரியாக 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அமெரிக்கா வரலாறு படைத்தது.

இந்நிலையில் முதல் 6 ஓவர்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடத் தவறியதும் பவுலிங்கில் மிடில் ஓவர்களில் விக்கெட்டை எடுக்காததும் தோல்வியை கொடுத்ததாக பாபர் அசாம் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த நேரங்களில் ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். பந்து வீச்சிலும் முதல் 6 ஓவரில் நாங்கள் நன்றாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் எங்களுடைய ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுக்காதது தோல்விக்கு காரணமானது. வெற்றிக்கான முழு பாராட்டுகளும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். பிட்ச் கொஞ்சம் ஈரப்பதமாக இருதலை பட்சமாக இருந்தது. இருப்பினும் இதை நீங்கள் புரிந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com