

லக்னோ,
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி அணி முதல் இன்னிங்சில் 420 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 75 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா ஏ தரப்பில் தோர்ன்டன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 226 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி 185 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் இந்தியா ஏ அணிக்கு 412 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி நேற்றைய 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.
சாய் சுதர்சன் (44 ரன்), மானவ் சுதர் (1 ரன்) களத்தில் இருந்தனர். கே.எல். ராகுல் 74 ரன்னில் காயத்தால் வெளியேறினார். இந்நிலையில், இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 91.3 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 413 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 176 ரன்னும், சாய் சுதர்சன் 100 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இந்திய ஏ அணி கைப்பற்றியது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.