உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணியில் விளையாடிய வீரர் காலமானார்

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணியில் விளையாடிய யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற அணியில் விளையாடிய வீரர் காலமானார்
Published on

சண்டிகர்,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தது. அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் யாஷ்பால் சர்மா (வயது 66). இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த அவர், கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். உலக கோப்பை தொடரில் 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அந்த தொடரின் முதல் ஆட்டத்தில், பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாஷ்பால் சர்மா 89 ரன்கள் குவித்தார். அதேபோல், அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் (40 பந்துகள்), அரையிறுதியில் 61 ரன்கள் (115 பந்துகள்) எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

ஓய்வு பெற்ற பின் இந்திய கிரிக்கெட் வாரியம், பஞ்சாப் மற்றும் அரியானா கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வந்த அவர், தனது மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com