அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது - மயங்க் அகர்வால்

Image Courtesy: @IPL
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜிதேஷ் சர்மா 85 ரன்கள் அடித்தார்.
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் நுவான் துஷாரா, புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜிதேஷ் ஷர்மா 85 ரன்களும்,விராட் கோலி 54 ரன்களும் அடித்தனர். லக்னோ அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்னர் ஜிதேஷ் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற மயங்க் அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் ஜிதேஷ் சர்மாவிடம் குறைவாகவே பேசினேன். ஏனெனில், நான் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தால் அவர் அடிக்கப்போகிறார் என்பது எனக்கு புரிந்தது. அதனால் நான் சிங்கிள் மட்டும் எடுத்து கொடுத்தேன். மற்றவை எல்லாம் அவரே பார்த்துக் கொண்டார். இன்றைய போட்டியில் அவர் விளையாடிய விதம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருந்தது.
சரியான நேரத்தில் அவர் ரிஸ்க் எடுத்து ரன்களை குவித்தார். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை அவர் அட்டாக் செய்து விளையாடியதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. எங்களது பார்ட்னர்ஷிப் சிறிது வளர ஆரம்பித்ததுமே எனக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. கேப்டனாக இந்த போட்டியில் முன் நின்று அவர் வெற்றியை தேடித்தந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.






