என் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன - நிதிஷ் ரெட்டி உருக்கம்

தாம் கிரிக்கெட்டில் அசத்துவதற்காக தம்முடைய அப்பா வேலையை விட்டதாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.
image courtesy: BCCI
image courtesy: BCCI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய நிதிஷ் ரெட்டி ஆல் ரவுண்டராக ஜொலித்து வெற்றியில் தமக்குரிய பங்கை ஆற்றினார்.

ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய டி20 அணியில் அறிமுகம் ஆன அவர், அதில் சிறப்பாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வானார். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால் முதல் போட்டிக்கான பிளேயிங் 11-ல் இடம்பிடித்த அவர் நல்ல செயல்பாட்டையே வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தாம் கிரிக்கெட்டில் அசத்துவதற்காக தம்முடைய அப்பா வேலையை விட்டு வேறு நகருக்கு வந்து தமக்கு ஆதரவாக இருந்ததாக நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார். ஆனால் வேலையை விட்டதால் ஏற்பட்ட கடினமான சூழ்நிலையால் ஒருநாள் அவர் அழுததை தாம் பார்த்ததாகவும் நிதிஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் இளம் வயதில் இருந்தபோது நான் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டது இல்லை. எனக்காக என்னுடைய தந்தை அவருடைய வேலையை விட்டார். என் பின்னணியில் நிறைய தியாகங்கள் உள்ளன. ஒரு நாள் பொருளாதார பிரச்சினை காரணமாக என்னுடைய தந்தை அழுவதை பார்த்தேன். அப்போது எனக்காக என்னுடைய தந்தை தியாகத்தை செய்யும்போது நாம் கிரிக்கெட்டை வெறும் ஜாலிக்காக விளையாடக்கூடாது என்று உணர்ந்தேன்.

அந்த நேரத்திலிருந்து மிகவும் கடினமாக பயிற்சிகளை எடுத்து நான் வளர்ச்சி பெற்றது தற்போது வெற்றியை கொடுத்துள்ளது. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மகனாக என்னுடைய தந்தை தற்போது மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய முதல் இந்திய ஜெர்சியை நான் அவருக்கு கொடுத்தேன். அப்போது அவருடைய முகத்தில் பெரிய மகிழ்ச்சியை பார்த்தேன். அதனால் நானும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com