லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்

லக்னோவுக்கு எதிரான நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது ப்ரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது.
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @LucknowIPL
Image Courtesy: @IPL / @PunjabKingsIPL / @LucknowIPL
Published on

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 69 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ப்ரப்சிம்ரன் சிங்குக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த துவக்கம் தான் எங்களுக்குத் தேவைப்பட்டது. உண்மையில் எங்களுடைய இளம் வீரர்கள் தங்களது வேலையில் சிறப்பாக விளையாடி தங்கள் திறனை வைத்து வெற்றியில் பங்காற்றியுள்ளனர். நாங்கள் என்னவெல்லாம் திட்டம் தீட்டினோமோ அதை எங்களுடைய வீரர்கள் முழுமையாக செயல்படுத்தினர்.

உண்மையில் எங்களுடைய அணியில் சரியான கலவை கிடையாது. எங்களுடைய தோழமை மற்றும் கூட்டு இயக்கம் ஆகியவை சரியான நேரத்தில் கிளிக் ஆக வேண்டும். இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் போட்டியை வெல்வதற்கான திறனைக் கொண்டுள்ளன. அவர்களை வீழ்த்த வேண்டுமெனில் உங்களுக்கும் அதற்குத் தகுந்த மனநிலை வேண்டும்.

அதைத்தான் நாங்கள் எப்போதும் பேசுகிறோம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க முயற்சி செய்கிறேன். இந்த இன்னிங்ஸ் எனக்கு வரலாறு. நிகழ்காலத்திலும் அடுத்தப் போட்டியிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com