கிரிக்கெட் நடுவராக திருநங்கை.. தமிழ்நாட்டில் புதிய வரலாறு.. சரித்திரம் படைத்த ரித்திகாஸ்ரீ

கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக பொறுப்பேற்று ரித்திகாஸ்ரீ புதிய பாதையை உருவாக்கியுள்ளார்.
கிரிக்கெட் நடுவராக திருநங்கை.. தமிழ்நாட்டில் புதிய வரலாறு.. சரித்திரம் படைத்த ரித்திகாஸ்ரீ
Published on

சேலம்,

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக ரித்திகா ஸ்ரீ பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அவரது மனஉறுதியால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மாநில நடுவர் தேர்வு விண்ணப்பங்களில் 'இதர’ பாலினம் என்ற புதிய பிரிவைச் சேர்த்தது. இது ஆண், பெண் விருப்பங்களுடன் இணைந்து அனைவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

சேலத்தைச் சேர்ந்த திருநங்கை ரித்திகா, 2021 முதல் சேலம், கோயம்புத்தூர் ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றுகிறார். ஆர்.முத்துராஜ் என்ற பெயரில் பிறந்த இவர், மெக்கானிக்கல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ படித்தவர். மொஹாலியில் கால் சென்டரில் இருந்தபோது ஐபிஎல் பார்த்து நடுவராக ஆர்வம் கொண்டார்.

நடுவர் பணிக்கு வழிகாட்டுதல் குறித்து தெரிவித்த ரித்திகா ஸ்ரீ, "சமூக ஊடகங்கள் வழியாக சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை தொடர்புகொண்டேன். நடுவர் குழு தலைவர் யூ.ஜெயராமன் முக்கியமாக வழிகாட்டினார். ஆர்.பார்த்தசாரதி, வி.சாந்தி பூஷன் ஆகியோரும், நடுவர் பணி அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்ததற்காக நன்றி,” என்றார்.

பாலின மாற்றப் பயணத்திற்கு கிடைத்த ஆதரவு பற்றி தெரிவித்த அவர், "ஜெயராமன் ஐயாவும் அவரது மனைவியும் எனது மாற்றக் காலகட்டத்தில் ஆதரவளித்தார்கள். எனது முன்னேற்றம் தடைபடாமல் இருக்க, நடுவராக சில ஆண்டுகள் என்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு பாலின மாற்றம் செய்துகொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்” என்று குறிப்பிட்டார்.

2024-ல் கோயம்புத்தூரில் பாலின மாற்றம் செய்துகொள்ள ரித்திகா முடிவெடுத்தார். சிடிசிஏ லீக்கில் நடுவராகப் பணியாற்ற அங்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. “பார்வையாளராகவே செல்ல விரும்பினேன். ஆனால், உள்ளே நுழைய மறுக்கப்பட்டதுடன், மனதைப் புண்படுத்தும் கருத்துகளையும் எதிர்கொண்டேன்,” என அவர் வேதனையுடன் கூறினார்.

"ஒரு மணி நேரம் அழுதுகொண்டே வீடு திரும்பினேன். சண்டையிட்ட பின்னரே சென்றேன். மக்கள் திருநங்கைகளை பிச்சை எடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம், கண்ணியமான வாழ்வாதாரம் தேட எங்களை அனுமதிப்பதில்லை," என்று ரித்திகா ஸ்ரீ தனது ஆதங்கத்தையும் முன்வைத்தார். தற்போது அவர் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக வரலாறு படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது திருநங்கை புதிய பாதையை உருவாக்கியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com