

பெங்களூரு,
ஐபிஎல் வரலாற்றில் சேசிங்கில் 4,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிரான ஐபிஎல் 2026-ன் தொடக்க ஆட்டத்தில் இந்த வரலாற்றுச் சாதனையை கோலி நிகழ்த்தினார்.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 202 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இப்போட்டியில் 69 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் சேசிங்கில் 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் கோலி திகழ்கிறார். தற்போது 9,000 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.