

கட்டாக்,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஒடிசாவில் கட்டாக் நகரில் வசித்து வரும் பின்டு பெஹேரா அவர்களில் ஒருவர்.
பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் தொடர்புடைய 16 உருவங்களை தனது உடலில் பச்சை குத்தி கொண்டுள்ளார். அவற்றில் கோலி அணியும் ஜெர்சியின் 18 என்ற எண்ணும் ஒன்றாகும்.
இது தவிர்த்து விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் பச்சை குத்தியுள்ளார்.
இதுபற்றி பெஹேரா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நான் கோலியின் தீவிர ரசிகனாக உள்ளேன். ஏனென்றால் அவரது பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு எனது மரியாதையை செலுத்த முடிவு செய்து உடலில் பச்சை குத்தி கொண்டேன்.
கடந்த அக்டோபரில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையே விசாகப்பட்டினம் நகரில் நடந்த டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி நேரத்தில் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இந்த சந்திப்பில் தீவிர ரசிகனான என்னை அவர் கட்டி தழுவியதில் மகிழ்ச்சி அடைந்தேன் என கூறியுள்ளார்.