கம்பீர் சொல்வது முற்றிலும் உண்மை.. தோல்விக்கான காரணம்... - கவாஸ்கர் ஆதரவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.
மும்பை,
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் (பிட்ச்) 4-வது நாளில் இருந்துதான் சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தில் தொடக்க நாளிலேயே சுழற்பந்து வீச்சின் கை ஓங்கியது. அதுவும் 2-வது நாளில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் பேட்ஸ்மேன்கள் திண்டாடி போனார்கள்.
ஆனால் இத்தகைய ஆடுகளத்தை கேட்டது நாங்கள்தான். இது ஒன்றும் விளையாட முடியாத அளவுக்கு மோசமான ஆடுகளம் கிடையாது. பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் நன்றாக செயல்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்து இருந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதே போன்ற ஆடுகளத்தை கேட்டு வாங்கி, உதை வாங்கியது கம்பீருக்கு நினைவில்லையா?. அவர் எப்போதுதான் திருந்துவார்? என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கம்பீர் சொல்வது போல பிட்ச் மீது தவறில்லை என்று இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கவுதம் கம்பீர் சொல்வது முற்றிலும் உண்மை. இந்த ஆடுகளத்தில் 124 ரன்கள் துரத்தக்கூடியதாக இருந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பிட்ச் பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். சைமன் ஹார்மர் வீசிய ஒரு ஓவரில் எத்தனை பந்துகள் சுழன்றன? அவர் கலவையாக வீசினார்.
ஓரிரு பந்துகள் மட்டுமே சுழன்றன. எனவே பிட்ச்சில் தாறுமாறான சுழல் இல்லை. உண்மையில் அது நீங்கள் 5வது நாள் பேட்டிங் செய்ய வேண்டிய ஒரு பிட்ச் போல இருந்தது. அங்கே நீங்கள் ஒருநாள் அல்லது டி20 போட்டி போன்று மூன்று டாட் பந்துகளுக்குப் பிறகு அடித்து ஆடியதே பிரச்சினை.
இந்தியாவிடம் இருக்கும் பேட்டிங் வரிசைக்கு 124 இலக்கை 5 விக்கெட்டுகள் மீதம் வைத்து சேசிங் செய்திருக்கலாம். எனவே கம்பீர் கருத்தை நான் முற்றிலும் ஏற்கிறேன். பிட்ச்சில் தவறில்லை. 3வது நாளில் ஓரிரு பந்துகள் மட்டுமே திரும்பியது. அது இயற்கையானது” என்று கூறினார்.






