

கவுகாத்தி,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 19.4 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 12.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியடைந்தது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் கூறியதாவது:-
முதல் பேட்டிங்கில் ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான் வீரர்கள் ஆர்ச்சர், பர்கர் பந்து வீச்சை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஆடுகளம் சாதகமாக இருந்தது. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றிருக்க வேண்டும். 150 - 160 ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
இந்த தோல்வியை கடந்து அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அனைவருக்கும் இது சற்று பதற்றமான தொடக்க ஆட்டமாக இருக்கலாம். வரும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன்’ என்றார்.