வெற்றிப்பயணத்தை தொடரப்போவது யார்..? - சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
Image Courtesy:@IPL / @ChennaiIPL / @mipaltan
Image Courtesy:@IPL / @ChennaiIPL / @mipaltan
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 36 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. பாதி தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

5 முதல் 10 இடங்கள் வரை முறையே பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை அணிகள் உள்ளன. இந்நிலையில், விடுமுறை தினமான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு முல்லன்பூரில் நடைபெறும் 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் கடந்த முறை மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் பெங்களூரு களம் இறங்கும். அதேவேளையில், வெற்றிப்பயணத்தை தொடர பஞ்சாப் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா போன்றது என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டி நிற்பார்கள்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com