தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்..? குஜராத்துடன் இன்று மோதல்

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
அதன்படி மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற உள்ள 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப் 2 இடத்திற்குள் இருப்பதை உறுதி செய்து விடும்.
மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் அந்த அணி கடைசி இடம் பெற்றது கிடையாது. எனவே பெரிய வெற்றியோடு தொடரை நிறைவு செய்ய சென்னை அணி போராட உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள 68-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் கடைசி லீக் இதுவாகும். இதனால் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.






