ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகலா..? பி.சி.சி.ஐ. மறுப்பு

கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்தியா விலகலா..? பி.சி.சி.ஐ. மறுப்பு
Published on

மும்பை,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஐ.சி.சி. தொடர்களில் ஆசிய அணிகள் சிறப்பாக செயல்படும் பொருட்டு இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேவேளை, கடந்த 10ம் தேதி இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் எந்த வித தொடரிலும் போட்டியிட கூடாது எல பலரும் கூறினர். பி.சி.சி.ஐ.-யும் இதே முடிவெடுத்தாக கூறப்பட்டது.

இதனிடையே ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பி.சி.சி.ஐ. முடிவு என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்த தகவலுக்கு பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, முடிவையோ இதுவரை பி.சி.சி.ஐ. செய்யவில்லை. ஐ.பி.எல். மற்றும் இங்கிலாந்து தொடர்கள் மீதுதான் தற்போது எங்களது முழு கவனம் உள்ளது" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com