மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்தை 98 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற வங்காளதேசம்


மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்தை 98 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்ற வங்காளதேசம்
x

Image Courtesy: @ICC

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 30ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.

டாக்கா,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 252 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் கேப்டன் ஷர்மின் அக்தர் 96 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் ப்ரீயா சார்ஜென்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 253 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணியினர், வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 28.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் 154 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து தரப்பில் சாரா போர்ப்ஸ் 25 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன், நஹிதா அக்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 30ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.


1 More update

Next Story