மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

Image Courtesy: @ICC
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர் 74 ரன்கள் எடுத்தார்.
வெல்லிங்டன்,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர் 74 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 291 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா 75 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 53 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அன்னபெல் சதர்லேண்ட், அலனா கிங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.






