மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணியை வீழ்த்தி உபி வாரியர்ஸ் வெற்றி

உபி வாரியர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் நவி மும்பையில் இன்று நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதின.இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லெனிங் , கிரன் நவ்கிரி களமிறங்கினர். கிரன் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதனை தொடர்ந்து களமிறக்கிய லிட்ச்பில்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் லெனிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லெனிங் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய லிட்ச்பில்டு 37 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அந்த அணியின் எமிலியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை விளையாடியது.
தொடக்கம் முதல் மும்பை அணி வீராங்கனைகள், உபி வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.அந்த அணியில் அமெலியா கேர், அமன்ஜோத் கவுர் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். அமெலியா கேரி 49 ரன்களும் , அமன்ஜோத் கவுர் 41 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் உபி வாரியர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






