

கான்பெரா,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கான்பெராவில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஜார்ஜியா வோல் அதிரடியாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். பெத் மூனி 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனைகள் அணிக்கு சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். சபாலி வர்மா 29 ரன்களும், மந்தனா 31 ரன்களும் எடுத்தானர். ஆனால் அடுத்து வந்தவர்கள் பெரிய அளவில் ரன் குவிக்க தவறினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்கள் எடுத்து போராடினார். ஆனால் இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.