

லண்டன்,
மகளிர் டி20 உலகக் கோப்பையில் 20-வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது அயர்லாந்து.
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வரும் 20-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீராங்கனை ஆமி ஹண்டர் மற்றும் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இருவரும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரெபேக்கா ஸோகெல் 12 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன்பின்னர் கேப்டன் கேபி லூயிஸ் மற்றும் லியா பால் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய லியா பால் 27 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேபி லூயிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் ஆலிஸ் டெக்டர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சிறப்பாக ஆடிய கேபி லூயிஸ், 50 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.