உன்னால் விளையாட முடியாது.. 6 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பாய்.. எழுந்த விமர்சனங்கள்.. மனம் திறந்த பும்ரா


உன்னால் விளையாட முடியாது..  6 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பாய்.. எழுந்த விமர்சனங்கள்.. மனம் திறந்த பும்ரா
x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா இதுவரை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

லீட்ஸ்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது இன்னிங்சில் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஜாக் கிராவ்லி 12 ரன்னுடனும், பென் டக்கெட் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மற்ற பவுலர்களிடம் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் பனிச்சுமை காரணமாக அவர் மீண்டும் காயத்தில் சிக்கி விடுவாரோ? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஏனெனில் அடிக்கடி காயத்தில் சிக்கும் பும்ரா சில மாதங்களுக்கு முன்பு நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின்போது முதுகில் காயமடைந்தார். இதனால் அவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை தவற விட வேண்டி இருந்தது.

காயத்தில் இருந்து குணமாகி விட்ட பும்ரா, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளார். ஆனாலும் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு இந்த தொடரில் 3 டெஸ்டுகளில் மட்டுமே அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அவரின் உடற்தகுதி குறித்து பல விதமான விமர்சனங்கள் வருகின்றன. இந்நிலையில் தன் மீதான விமர்சனங்கள் குறித்து முதன் முறையாக பும்ரா மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "எனது உடற்தகுதி குறித்து பல்வேறு விதமாக எழுதுகிறார்கள். அவர்களிடம் இப்படித்தான் எழுத வேண்டும் என்று என்னால் கூற முடியாது. ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்புவதை எழுதுவதற்கு சுதந்திரம் உண்டு. அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. எப்போதும் நான் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன். எனது நம்பிக்கையோடு இந்தியாவுக்காக ஆடுகிறேன்.

இதே நம்பிக்கையில்தான் மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடுகிறேன். உன்னால் (காயத்தை சுட்டிகாட்டி) இனி விளையாட இயலாது என்று சிலர் கூறினார்கள். இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பாய் என்றார்கள். பிறகு 8 மாதம் என்று சொன்னார்கள். இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே நானும் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகள் விளையாடி விட்டேன்.

இப்போது கூட இனி காயமடைந்தால், உனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்று விமர்சிக்கிறார்கள். இதை எல்லாம் சிந்திக்காமல், எனது பணியை தொடர்ந்து செய்கிறேன். ஒவ்வொரு 3-4 மாதங்களிலும் எனது காயம் குறித்து செய்திகள் வருகின்றன. எனக்கு என்று எவ்வளவு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதுவரை தொடர்ந்து விளையாடுவேன். எப்போதும் என்னை நன்றாக தயார்படுத்திக் கொள்கிறேன். மற்றவற்றை கடவுளிடம் விட்டு விடுகிறேன்.

கடவுளின் ஆசீர்வாதம் எப்படி இருக்கிறதோ அதை வைத்து முன்னேறி செல்ல முயற்சிப்பேன். இந்திய அணியை முன்னோக்கி எடுத்து செல்வேன். எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி யோசிக்கமாட்டேன். தற்போதைய தருணத்தில் மைதானத்தில் இருக்கிறேன். இங்கு எனது வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் அவ்வளவுதான்" என்று கூறினார்.

1 More update

Next Story