3 மாசம் தான்னு சொன்னாங்க...புற்றுநோயை வென்று வந்தது பற்றி யுவராஜ் சிங் உருக்கம்

3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
‘You have 3-6 months left to live’: Yuvraj Singh was told to choose between playing cricket and undergoing treatment
Published on

சென்னை,

புற்றுநோயை வென்று மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய அனுபவத்தைப் பற்றி யுவராஜ் சிங் உருக்கமாகப் பேசியுள்ளார். புற்றுநோய் காரணமாக 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார். அவர் பேசுகையில்,

நீங்கள் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று உங்களிடம் சொல்லும் போது, நாம் இறக்கப் போகிறோம் என்ற எண்ணமே முதலில் மனதில் தோன்றும். என்னுடைய நுரையீரலும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி நரம்பு மண்டலத்தை அழுத்தியது. அதனால் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. ஆனால் அதற்கு முன் சுமார் 40 போட்டிகளில் நான் 12-வது வீரராக மட்டுமே இருந்தேன்.

நீண்ட காலமாக காத்திருந்த எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும், அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மருத்துவமனையில் டாக்டர் என்ஹார்ன், நீங்கள் இங்கிருந்து புற்றுநோய் இல்லாத மனிதராக வெளியேறுவீர்கள் என்று சொன்னது எனக்கு மிகுந்த தைரியத்தை அளித்தது. அனைத்து சிகிச்சைகளும் முடிந்து மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடலாமா என்று நினைத்த போது, அது எனக்கு இரண்டாவது வாழ்க்கை போலத் தோன்றியது. மீண்டும் விளையாடுவது சாத்தியமில்லை என்று உலகம் சொன்னபோதும், அதை நான் நிரூபித்துக் காட்ட விரும்பினேன், என்றார்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரிலும், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த இரு தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் யுவராஜ் சிங், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com