இளையோர் ஆசிய கோப்பை: இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்..!

பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
Image :Pakistan Cricket
Image :Pakistan Cricket
Published on

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்ற இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட்  இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் இருவரும் அரைசதம் அடித்தனர்.

பின்னர் சைம் அயூப் 59 ரன்களும் , சாஹிப்சாதா பர்ஹான் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் உமைர் யூசுப் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தயப் தாஹிர் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய தயப் தாஹிர்108 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.இந்தியா சார்பில் ரியான் பராக் , ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் , அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். தொடக்க விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் ,சாய் சுதர்சன் 29 ரன்களில் வெளியேறினார்.

நிக்கின் ஜோஸ்11 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் அபிஷேக் ஷர்மா அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த நிஷாந்த் சந்து 10 ரன்கள் , யாஷ் துல் 39 ரன்கள் , ஜுரேல் 9 ரன்கள் , ரியான் பராக் 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இந்திய அணி 40 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com