ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: மைதானத்தில் மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்

டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவக் குழு மூலம் முதலுதவி அளிக்கப்பட்டது.
Photo Credit: AFP
Photo Credit: AFP
Published on

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று முன்தினம் இரவு கண்கவர் கலைநிகழ்ச்சி மற்றும் வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.

அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை 11 நாடுகளில் அரங்கேறும் இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை மோதின.ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் பாதியின் பிற்பகுதியில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் தீடிரென மயங்கி விழுந்தார்.

மருத்துவ குழுவினர் உடனடியாக அவருக்கு ஆடுகளத்திலே 10 நிமிடங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.அதன் பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் "கிறிஸ்டியன் எரிக்சன் கண் விழித்துவிட்டதாகவும் , மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்" என்று டேனிஷ் கால்பந்து யூனியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் துவங்கியது. இதில், டென்மார்க் அணியை 1-0 என்ற கணக்கில் பின்லாந்து அணி வென்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com