

டோக்கியோ
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று இந்திய வீரர்கள் 4 அரையிறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்தியா பெண்கள் ஹாக்கி அணி அரை இறுதிக்கு தகுதி பெற்று இன்று அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது இதில் இந்திய அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்று இருந்தது.
2ஆம் கால் பகுதி முடிவில் இந்தியா - அர்ஜென்டினா 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 2 - 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.அர்ஜென்டினாவுடனான போட்டியில் கடைசி வரை போராடி இந்திய அணி தோல்வியுற்றது. வெண்கலத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதும்.
மல்யுத்தம் 59 கிலோ எடை ( பிரீ ஸ்டைல்) பிரிவில் அரையிறுதியில் ரவிகுமார் தாஹியா பதக்கத்தை நெருங்கிவிட்டார்! பல்கேரிய வீரர் வேங்கலோவை 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். இவர் அரை இறுதியில் கஜகஸ்தான் வீரர் சனாயேவ்வை எதிர்கொண்டார். இதில் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
கால் இறுதியில் சீன வீரர் சூஷென் லின் 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்தவர் அட்டகாச கம்பேக் கொடுத்து வெற்றி. கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றார்.அரையிறுதியில் தீபக் புனியா அமெரிக்க வீரர் டேவிட் மாரிஸ் டெய்லருடன் மோதினார்.இதில் தோல்வி அடைந்து இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய வீரர் தீபக் புனியா நாளை வெண்கல பதக்கத்திற்காக விளையாடுகிறார்.