இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முழங்கையில் ‘ஆபரேஷன்’ - உலக தடகளத்தில் பங்கேற்பது சந்தேகம்

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு முழங்கையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால், உலக தடகளத்தில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.
Published on

மும்பை,

இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா, வலது முழங்கையில் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த காயத்துக்கு அவர் நேற்று முன்தினம் மும்பையில் ஆபரேஷன் செய்து கொண்டார். 2 மணி நேரம் நடந்த சிகிச்சையில், முழங்கை மூட்டில் நொறுங்கிய எலும்பு துண்டு அகற்றப்பட்டது. காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடைய 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். இதனால் தோகாவில் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

அரியானாவைச் சேர்ந்த 21 வயதான நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தேசிய சாதனையாளராக விளங்குகிறார். ஆஸ்பத்திரியில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள சோப்ரா, வலுவான வீரராக மீண்டு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com