சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு நிதி உதவி - ஜார்கண்ட் முதல்-மந்திரி நடவடிக்கை

வறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி நிதி உதவி வழங்கியுள்ளார்.
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கீதா குமாரி. நடைப்பந்தயத்தில் மாநில அளவிலான போட்டியில் 8 தங்கப்பதக்கமும், தேசிய போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும் வென்று இருக்கும் கல்லூரி மாணவியான கீதா குமாரி வறுமை காரணமாக சாலையோரத்தில் காய்கறி விற்பனை செய்து தனது குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இதனால் அவரது தடகள பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது. அவரது ஏழ்மை நிலை குறித்து தனது டுவிட்டருக்கு வந்த தகவல் மூலம் அறிந்த ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரென், தடகள வீராங்கனை கீதா குமாரிக்கு உதவி செய்யும்படி ராம்கார்க் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து ராம்கார்க் மாவட்ட துணை கமிஷனர் சந்தீப் சிங், கீதா குமாரியை அழைத்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கியதுடன், அவருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அவர் பயிற்சியை தொடருவதற்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com