புரோ கைப்பந்து போட்டியில் கோழிக்கோடு அணி ‘திரில்’ வெற்றி

புரோ கைப்பந்து போட்டியில், கோழிக்கோடு அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
Published on

கொச்சி,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் சுற்றில் மோத வேண்டும்.

இந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு அரங்கேறிய 4-வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி, மும்பா வாலியை எதிர்கொண்டது. திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 15-10, 12-15, 15-13, 14-15, 15-9 என்ற செட் கணக்கில் மும்பா வாலியை வீழ்த்தியது. கோழிக்கோடு அணியில் அதிகபட்சமாக அஜித் லால் 16 புள்ளிகள் சேகரித்தார். கோழிக்கோடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே தனது முதல் லீக்கில் சென்னை அணியை தோற்கடித்து இருந்தது.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ்- ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com