ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : ஒரே நாளில் இந்தியாவிற்கு 3 வெண்கலப் பதக்கம்!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
Image Source: @airnewsalerts twitter
Image Source: @airnewsalerts twitter
Published on

உலான்பாடர் (மங்கோலியா),

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தஹியா, பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 இந்திய மல்யுத்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

ப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் ஆண்கள் அணியிலிருந்து 20 மல்யுத்த வீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இதில் மகளிர் அணியைச் சேர்ந்த 10 மல்யுத்த வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் 1.28 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டிகளில், ஆண்கள் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் பங்கேற்ற ஐந்து இந்திய மல்யுத்த வீரர்களில் மூவர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அவர்கள் மூவரும் அந்தந்த பிரிவுகளில் காலிறுதி சுற்றில் தோல்வியடைந்தனர். ஆனால், 77 கிலோ மற்றும் 133 கிலோ எடை பிரிவுகளில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவினர்.

87 கிலோ எடை பிரிவில் சுனில் குமார், 55 கிலோ எடை பிரிவில் அர்ஜுன் ஹலகுர்கி மற்றும் 63 கிலோ எடை பிரிவில் நீரஜ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இதன்மூலம், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com